< Back
சினிமா செய்திகள்
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை பின்னணி பாடகி கல்பனா விளக்கம்
சினிமா செய்திகள்

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை பின்னணி பாடகி கல்பனா விளக்கம்

தினத்தந்தி
|
6 March 2025 7:32 AM IST

தூக்கமின்மை காரணமாக அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று பாடகி கல்பனா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

பிரபல பின்னணி பாடகி கல்பனா. தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். தமிழில் தாஜ்மகால், ரஜினி முருகன், மாமன்னன், மனிதன், என் ராசவின் மனசுல உள்பட பல்வேறு படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கல்பனா பங்கேற்றுள்ளார்.

தெலுங்கானாவின் ஐதரபாத் மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கல்பனா வசித்து வந்தார். அவரது வீடு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த குடியிருப்பில் வசித்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கல்பனா மயங்கி கிடந்தார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர், அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, கண் விழித்த கல்பனாவிடம், போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

அப்போது அவர் கூறியதாவது, 'தூக்கமின்மை காரணமாக, அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன். மருத்துவர்கள் பரிந்துரைத்த அளவை விட, அதிக தூக்க மாத்திரைகளை தவறுதலாக எடுத்துக் கொண்டதால் தான் வீட்டில் நான் மயங்கி விழுந்தேன். நான், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்த அவரது மகள் கூறியதாவது, 'என் அம்மா இப்போது நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மன அழுத்தம் காரணம் அம்மா, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தினமும் தூக்க மாத்திரைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் எடுத்துக்கொண்ட மாத்திரையில் கொஞ்சம் அதிகமாகி விட்டது. அம்மா தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை, தயவு செய்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்