
இயக்குனர் மோகன் ஜியின் புதிய பட அறிவிப்பு

இயக்குநர் மோகன் ஜி இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானாவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும். திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. கடைசியாக செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
மோகன் ஜி மீது சாதிய முத்திரை குத்தப்பட்டாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய சினிமா முயற்சியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். இவரது படங்களை ஒட்டி இவர் தெரிவிக்கும் கருத்துகளே பல வேளைகளில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
இவர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறான கருத்து ஒன்றை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து பெரும் பிரச்சினையை எதிர்கொண்டார். ஆதாரமற்ற வகையில் அவதூறு பரப்பியதற்காக மோகன் ஜி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த 'பேட் கேர்ள்' படத்தின் டீசரை விமர்சித்து எக்ஸ் தளத்தில் இயக்குநர் மோகன் ஜி சமீபத்தில் வெளியிட பதிவு வைரலானது.
சமீபத்தில் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்தை குறித்து மோகன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இப்பதிவின் புகைப்படத்தில் அவருடன் நடிகர் ரிச்சர்ட் ரிஷி இருக்கிறார். அடுத்து இயக்கும் படத்தில் இவர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மோகன் ஜி இயக்கும் அவரின் 5-வது திரைப்படத்தின் அறிவிப்பு நாளை காலை 11.59 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.