
மகளின் நினைவு தினத்தையொட்டி, உருக்கமான பதிவை வெளியிட்ட இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜா மறைந்த மகள் பவதாரிணி குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி 25 ம் தேதி இலங்கையில் காலமானார்.
இன்று அவர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா ஆடியோ வடிவில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் அருமை மகள் பவதாரிணி எங்களைவிட்டு பிரிந்த நாள். அன்பே உருவான இந்த மகள் பிரிந்த பின்புதான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது. காரணம், என்னுடைய கவனமெல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டது இப்போது வேதனையைத் தருகிறது. அந்த வேதனையெல்லாம் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக இருப்பது எனக்குக் கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கிறது.
பவதாரிணியின் பிறந்தநாளான பிப்ரவரி 12ம் தேதி அன்று அவருடைய திதி வருகிறது. அவை இரண்டையும் சேர்த்து நினைவு நாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்று இருக்கிறோம். அன்று அனைத்து இசைக்கலைஞர்களும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனது மகள் பவதாரிணியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் பவதாரிணிக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. அழகி படத்தில் அவர் பாடிய 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடல் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.