
'கிங்ஸ்டன்' படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - கார்த்திக் சுப்பராஜ்

கமல் பிரகாஷ் எழுதி, இயக்கிய ‘கிங்ஸ்டன்’ படம் வருகிற மார்ச் 7ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ள படம் 'கிங்ஸ்டன்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ளனர். இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம். இப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.
இந்த படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது இந்தியாவின் முதல் கடல் பேய் படமாகும். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கிங்ஸ்டன் படம் குறித்த தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, "கிங்ஸ்டனின் டிரெய்லர் சுவாரஸ்யமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் கடல் கற்பனை சாகசத்தை திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒட்டுமொத்த குழுவிற்கும் என் வாழ்த்துகள்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.