
நடிகை சரண்யாவுக்கு நடனம் சொல்லி தரும் தனுஷ்.. வைரலாகும் வீடியோ

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
சென்னை,
தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காதல், நட்பு என வழக்கமான கதை களத்தில் சுவாரசியமாக இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், சரண்யா பொன்வண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கும் இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் ஒரு பாடலில் நடனமாடியுள்ளார். நல்ல வரவேற்பை பெற்றும் வரும் இப்படம் உலக அளவில் ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இப்படத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்துள்ளார். வழக்கமாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான பாணியில் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு நடன காட்சிக்காக தனுஷ் சரண்யாவிற்கு நடனம் சொல்லி கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சரண்யா பொன்வண்ணன் 'வேலையில்லா பட்டதாரி, கொடி' போன்ற படங்களில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.