
'ரெட்ட தல' படத்திற்கான டப்பிங் பணியை நிறைவு செய்த அருண் விஜய்

கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'ரெட்ட தல' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையில் வெளியான வணங்கான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து இவர், கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் தடம் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்திற்கான டப்பிங் பணிகளை நடிர் அருண் விஜய் நிறைவு செய்துள்ளார். இந்த டப்பிங் பணியின் போது எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.