
'கஜினி 2' படத்தின் அப்டேட்டை பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ்

‘கஜினி 2’ படத்தினை ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
சென்னை,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் 'கஜினி'. இந்த படத்தில் அசின், நயன்தாரா, ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அமீர்கான் நடிக்க 2008-ம் ஆண்டு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதையும் ஏ.ஆர்.முருகதாஸே இயக்கி இருந்தார். இரண்டுமே மாபெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் கஜினி படத்தின் 2 பாகம் விரைவில் வெளியாகும் என்று நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார். இதனால் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
இதற்கிடையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து 'சிக்கந்தர்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.முருகதாஸிடன் 'கஜினி 2' படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், "எனக்கு சில யோசனைகள் உள்ளன. நாங்கள் அனைவருமே அவர் அவர்களுடைய படங்களில் மும்முரமாக இருக்கிறோம். சரியனா நேரம் அமையும்போது இதுகுறித்து பேசி முடிவு செய்வோம். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த கஜினி 2 படத்தினை தயாரிக்க முனைப்புடன் இருக்கிறார். 'கஜினி 2' படத்தினை ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கவுள்ளோம். இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பகட்ட நிலையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.