< Back
சினிமா செய்திகள்
ஆளும் கட்சியை விமர்சித்தால்தான் அடுத்த இடத்துக்கு வரமுடியும் - விஜய் குறித்து நடிகர் பார்த்திபன் கருத்து
சினிமா செய்திகள்

ஆளும் கட்சியை விமர்சித்தால்தான் அடுத்த இடத்துக்கு வரமுடியும் - விஜய் குறித்து நடிகர் பார்த்திபன் கருத்து

தினத்தந்தி
|
30 Jan 2025 5:38 AM IST

பெரியார் என்பது நமது பாரம்பரியத்தில் சமூகத்தில் நீக்க முடியாத விஷயம் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

சினிமா நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் நேற்று புதுச்சேரி வந்தார். அவர் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமிநாராயணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் சுமார் 15 நிமிடம் தனியாக பேசினார்கள். அதன்பின் பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிதாக அரசியலுக்கு வருபவர்களை ஊக்குவிக்கவேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் தப்பு கிடையாது.விஜய் அவரது வேகத்தில் செல்லட்டும். அரசியலில் பெரிய இடத்துக்கு செல்ல தடை இல்லாமல் இருக்காது. ஆட்சியை பிடிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதனால் தடைகளை தாண்டி செல்வதுதான் உண்மையான தலைவருக்கு அழகு. ஆளுங்கட்சியை விமர்சனம் செய்ததால்தான் அடுத்த இடத்துக்கு வரமுடியும். எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் அதைத்தான் செய்தார்கள். அதைவிடுத்து பாராட்டிக்கொண்டு இருந்தால் தலைவராக வரமுடியாது. இதனால் நான் விஜய்க்கு ஆதரவாக செல்கிறேன் என்று அர்த்தமல்ல. பெரியார் என்பது நமது பாரம்பரியத்தில் சமூகத்தில் நீக்க முடியாத விஷயம். அதில் எதிர் கருத்து சொல்வதற்கு பின்னால் வேறு ஏதாவது அரசியல் இருக்கலாம். அது நமக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்