
மலையாள பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஆர்யா

நடிகர் ஆர்யா மலையாள பட இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இவர் தற்போது மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தது பா. ரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரை 2, வேட்டுவம் ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஆர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் '2018' எனும் திரைப்படம் வெளியானது. 2018ம் ஆண்டு கேரளாவில் பெய்த மழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஜூட் ஆண்டனி ஜோசப் என்ன படம் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்த ஜூட் ஆண்டனி, நடிகர் விக்ரமை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. பின்னர் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்புவின் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என தகவல் கசிந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி ஜூட் ஆண்டனி ஜோசப், ஆர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகப் போவதாகவும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.