< Back
பிற விளையாட்டு
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - சானியா மிர்சா ஆதரவு
பிற விளையாட்டு

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - சானியா மிர்சா ஆதரவு

தினத்தந்தி
|
29 April 2023 11:41 AM GMT

போராடி வரும் வீராங்கனைகளுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்று சானியா மிர்சா வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர்.

3 நாள் நீடித்த போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியை அமைத்தார். இந்த கமிட்டி சார்பில் விசாரணை நடத்தப்பட்டு மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இன்னும் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இதையடுத்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் கடந்த 23-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். பிரிஜ் பூஷனின் பதவி பறிக்கப்பட்டு, அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும், அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போது போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் என்றும், அவர்களுக்கு நாம் தற்போது உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். போராடி வரும் வீராங்கனைகளுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் செய்திகள்