புரோ கபடி லீக்: இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர்-புனே அணிகள் இன்று பலப்பரீட்சை
|இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.
மும்பை,
9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 லீக் ஆட்டங்களிலும் புனே அணியே வெற்றி பெற்றிருந்தது.
2014-ம் ஆண்டு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக பட்டத்தை வெல்ல வரிந்து கட்டும். அதேநேரத்தில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கும் புனேரி பால்டன் அணி தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி, கோப்பையை கையில் ஏந்த போராடும்.
எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.80 கோடி பரிசாக கிட்டும்.