ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ்: இந்திய வீராங்கனை பிரனதி நாயக் வெண்கலப்பதக்கம் வென்றார்
|9-வது ஆசிய ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 'வால்ட்' பிரிவில் இந்திய வீராங்கனை பிரனதி நாயக் 13.367 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார். தென்கொரியா வீராங்கனை யோ சியோ ஜியோங் (14.084 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், ஜப்பானின் ஷோகோ மியாதா (13.884 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் பிரனதி நாயக் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். இதன் மூலம் அவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஏற்கனவே 2019-ம் ஆண்டு போட்டியிலும் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியதன் மூலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரனதி நாயக் இங்கிலாந்தில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.