< Back
கிரிக்கெட்
அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா பஞ்சாப்? டெல்லி அணியுடன் இன்று மோதல்
கிரிக்கெட்

அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா பஞ்சாப்? டெல்லி அணியுடன் இன்று மோதல்

தினத்தந்தி
|
17 May 2023 12:41 AM GMT

‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி உள்ளது.

தர்மசாலா,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கான ரேசில் 7 அணிகள் இருக்கின்றன. இந்நிலையில் தர்மசாலாவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் உள்ளது. அத்துடன் அந்த அணி ரன்-ரேட்டிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வி என 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த டெல்லி அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டு எழுச்சி பெற்றது. ஆனால் அதன் பிறகு கடந்த 2 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது.

ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டங்களில் பஞ்சாப்பும், 15 ஆட்டங்களில் டெல்லியும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்