< Back
கிரிக்கெட்
உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையில் பஞ்சாப் - பெங்களூரு அணியுடன் இன்று மோதல்
கிரிக்கெட்

உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையில் பஞ்சாப் - பெங்களூரு அணியுடன் இன்று மோதல்

தினத்தந்தி
|
19 April 2023 11:53 PM GMT

பஞ்சாப் அணி உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

மொகாலி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொகாலியில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி அதில் 3-ல் வெற்றியும் (கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோவுக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ஐதராபாத், குஜராத்துக்கு எதிராக) கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் தோள்பட்டை காயத்தால் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ஷிகர் தவான் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. இதே போல காயத்தில் இருந்து குணமடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள அதிரடி ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனின் பெயர் அணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படலாம். பெங்களூருவுக்கு எதிராக மோதிய கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

பெங்களூரு அணியை எடுத்துக் கொண்டால், 5 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றி (மும்பை, டெல்லிக்கு எதிராக), 3-ல் தோல்வி (கொல்கத்தா, லக்னோ, சென்னைக்கு எதிராக) என்று 4 புள்ளியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 227 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி நெருங்கி வந்து 8 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

விராட் கோலி, பிளிஸ்சிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரைத் தான் பெங்களூரு மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் ஜொலித்தால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியும். இன்னும் முழு உடல்தகுதியை எட்டாத வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை.

மேலும் செய்திகள்