< Back
கிரிக்கெட்
பரபரப்பான ஆட்டம்...கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்...!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

பரபரப்பான ஆட்டம்...கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்...!

தினத்தந்தி
|
30 April 2023 1:55 PM GMT

சென்னை அணி தரப்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 92 ரன்கள் குவித்தார்.

சென்னை,

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் ஆடின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செயவதாக அறிவித்தது. இதையடுத்து சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம் இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு நிதான ஆட்டத்துடன் அதிரடி ரன் வேட்கையில் ஈடுபட்ட இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 31 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கான்வேயுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில் துபே 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய மொயீன் அலி 10 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஜடேஜா களம் இறங்கினார். அவர் கடைசி ஓவரின் முதல் பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் தோனி களம் இறங்கினார்.

இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரம்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரம்சிம்ரன் சிங் 42 ரன்னும், தவான் 28 ரன்னும், அடுத்து களம் இறங்கிய அதர்வா 13 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் சாம் கரண் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவிங்ஸ்டன் துஷார் தேஷ்பாண்டேவின் ஒரே ஓவரில் 3 சிக்சர் அடித்து அசத்திய நிலையில் அதே ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். அவர் 24 பந்தில் 40 ரன்கள் அடித்தார். இதையடுத்து ஜித்தேஷ் ஷர்மா கர்ரனுடன் ஜோடி சேர்ந்தார்.

சாம் கர்ரண் 29 ரன் எடுத்த நிலையில் பதிரானா பந்துவீச்சில் போல்டானார். இதையடுத்து ஷாரூக் கான் களம் இறங்கினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.


மேலும் செய்திகள்