< Back
கிரிக்கெட்
தோனி பேட்டிங் செய்வதே இதற்குத்தான்.. வெற்றி குறித்து யாருக்கும் கவலை இல்லை.. - சேவாக்
கிரிக்கெட்

தோனி பேட்டிங் செய்வதே இதற்குத்தான்.. வெற்றி குறித்து யாருக்கும் கவலை இல்லை.. - சேவாக்

தினத்தந்தி
|
11 May 2024 7:39 PM GMT

எம்.எஸ். தோனியின் பேட்டிங் வரிசை குறித்து சேவாக் சில கருத்துகளை முன் வைத்திருக்கிறார்.

ஐதராபாத்,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறார். எனினும், அவர் பேட்டிங் வரிசையில் 8 அல்லது 9-வது இடத்தில் களமிறங்கி வருவது விவாதத்துக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது. நடப்பு ஐ.பி.எல். தொடருடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் சி.எஸ்.கே. அணியின் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கடைசி சில ஓவர்கள் மட்டும் பேட்டிங் செய்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் அதிரடியாக சில கருத்துகளை முன் வைத்திருக்கிறார். தோனி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் ரசிகர்களை மகிழ்விக்கிறார். வெற்றி தோல்வி பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை என வெளிப்படையாக சேவாக் பேசியிருக்கிறார்.

இது குறித்து சேவாக் பேசுகையில்,

"தோனியின் பேட்டிங் வரிசை குறித்த விவாதத்தை நாம் முடித்துக் கொள்ள வேண்டும். அவர் என்ன செய்கிறார் என அவருக்கு தெரியும். அது அவருடைய விருப்பம். நீங்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால், அவர் செய்யும் பேட்டிங்கிற்கு இணையாக மற்ற சி.எஸ்.கே. பேட்ஸ்மேன்களும் விளையாட வேண்டும். குஜராத் டைட்டன்சுக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. அணியின் டேரில் மிட்செல் மற்றும் மொயீன் அலி, குஜராத் அணியின் சுதர்சன் மற்றும் கில் ஆட்டத்துக்கு இணையாக ஆடவில்லை. யாராவது ஒருவர் சதம் அடித்திருக்க வேண்டும்.

அதேபோல ஜடேஜா அல்லது ஷிவம் துபே 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தால் இலக்கை நெருங்கி இருக்கலாம். தோனியின் பேட்டிங் வரிசை பற்றி நான் விவாதிக்க மாட்டேன். அவர் எங்கு பேட்டிங் செய்தாலும் எனக்கு கவலை இல்லை. அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். ரசிகர்களை மகிழ்விக்கிறார். சி.எஸ்.கே. வெற்றி பெற்றால் என்ன? தோல்வி அடைந்தால் என்ன? யாருக்கும் கவலை இல்லை. அவர் ரசிகர்களை மகிழ்விக்கிறார். அவ்வளவுதான்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்