< Back
கிரிக்கெட்
இந்திய அணியில் விராட், ரோகித் இடத்தை இந்த 2 வீரர்களால் நிரப்ப முடியும் - ஜிம்பாப்வே முன்னாள் வீரர் கருத்து
கிரிக்கெட்

இந்திய அணியில் விராட், ரோகித் இடத்தை இந்த 2 வீரர்களால் நிரப்ப முடியும் - ஜிம்பாப்வே முன்னாள் வீரர் கருத்து

தினத்தந்தி
|
8 July 2024 9:01 AM GMT

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் மற்றும் ரோகித் ஓய்வு பெற்றுள்ளனர்.

ஹராரே,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது.

வெற்றி வாகை சூடியதும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட், ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அவர்களுடைய இடத்தை நிரப்பப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்புவது கடினம் என்று முன்னாள் ஜிம்பாப்வே நட்சத்திர வீரர் ஹமில்டன் மசகட்சா கூறியுள்ளார் . அதே சமயம் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அவர்களுடைய இடத்தை நிரப்பக் கூடியவர்களாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"அது மிகப்பெரிய காலியிடம். அவர்களைப் போன்ற வீரர்களை நிரப்புவது கடினம். இருப்பினும் இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்கு இந்தியா சிரமப்படாது என்று நான் சொல்வேன். அந்த இடங்களுக்கு தகுந்த சரியான வீரர்களை நீங்கள் கண்டறிய வேண்டும். நான் சுப்மன் கில் போன்ற வீரரின் முன்னேற்றத்தை பார்க்க காத்திருக்கிறேன்.

சமீப காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவருடைய ஆட்டத்தை கொஞ்சம் பார்த்துள்ளேன். நான் பார்த்த வரை அவருடைய ஆட்டத்தை விரும்புகிறேன். எனவே ஓய்வு பெற்ற வீரர்களின் ஒரு இடத்தை நிரப்பக்கூடிய வீரராக அவர் இருப்பார். அதேபோல் ஜெய்ஸ்வால். தன்னுடைய கேரியரை அவர் புத்திசாலித்தனமாக துவங்கியுள்ளார். எனவே இந்திய அணியிலிருந்து வெளியேறிய உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கு இந்த 2 வீரர்களால் முடியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்