< Back
கிரிக்கெட்
லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து ராகுல் விலகுகிறாரா? அணி நிர்வாகம் அளித்த பதில் என்ன?
கிரிக்கெட்

லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து ராகுல் விலகுகிறாரா? அணி நிர்வாகம் அளித்த பதில் என்ன?

தினத்தந்தி
|
10 May 2024 9:13 PM GMT

லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து கே.எல். ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.

ஐதராபாத்,

அனல் பறக்க நடந்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் கடந்த 8-ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 166 ரன்கள் இலக்கை அபிஷேக் ஷர்மா (75 ரன்கள், 28 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), டிராவிஸ் ஹெட் (89 ரன்கள், 30 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா, மைதானத்திலேயே அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலிடம் ஆக்ரோஷமாக விவாதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் விரக்தி அடைந்த ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து லக்னோ அணியின் செய்தி தொடர்பாளர் தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : "லக்னோ அணி அடுத்ததாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 14-ம் தேதி மோதுகிறது. அந்த போட்டியிலும் கே.எல் ராகுல்தான் கேப்டனாக இருப்பார். அதோடு மும்பை அணிக்கு எதிராக 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் கடைசி போட்டியிலும் அவரே கேப்டனாக இருப்பார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்