
image courtesy: PTI
ஓய்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட முகமது ஷமி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட முகமது ஷமி ஓய்வு குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தற்சமயம் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் அவர் எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பும் வகையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட முகமது ஷமி ஓய்வு குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பேசியது பின்வருமாறு:- "கிரிக்கெட் எப்போது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்காமல் சலிப்பை ஏற்படுத்துகிறதோ அப்போதுதான் நான் ஓய்வு பெற்று வெளியேறுவேன். இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து மீண்டும் களம் புகுவதற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன். டெஸ்ட், ஒருநாள் மட்டும் இல்லாமல் நிச்சயம் டி20 கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவேன். தற்போது எனக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் அறவே கிடையாது" என்று கூறினார்.