ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
|இந்திய அணி தரப்பில் ஆடார்ஷ் சிங் 76 ரன், உதய் சஹாரன் 64 ரன் எடுத்தனர்.
ப்ளூம்போன்டைன்,
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது.
இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்துடன் ஆடி வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அர்ஷின் குல்கர்னி, ஆடார்ஷ் சிங் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் அர்ஷின் குல்கர்னி 7 ரன்னிலும் அடுத்து வந்த முஷீர் கான் 3 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து உதய் சஹாரன் ஆடார்ஷ் சிங்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தனர். இதில் ஆடார்ஷ் சிங் 76 ரன், உதய் சஹாரன் 64 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய பிரியன்ஷு மோலியா, ஆரவெல்லி அவனிஷ் இருவரும் தலா 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி ஆடி வருகிறது.