< Back
கிரிக்கெட்
வெளியேற்றுதல் சுற்று: நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - பெங்களூரு அணியின் கேப்டன் பேட்டி
கிரிக்கெட்

வெளியேற்றுதல் சுற்று: நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - பெங்களூரு அணியின் கேப்டன் பேட்டி

தினத்தந்தி
|
23 May 2024 6:42 AM GMT

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது.

அகமதாபாத்,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பாப் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் அடித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 19 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பின்னர் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் கூறுகையில், " பனி இருந்ததால் இரண்டாவதாக பந்து வீசுவது சற்று கடினமாக இருந்தது. அதேபோன்று பேட்டிங்கிலும் நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். இந்த போட்டியில் 20 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருக்க வேண்டும். இருந்தாலும் எங்களது அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக போராடினர்.

இதை தவிர வேறு எதையும் நான் எனது வீரர்களிடம் கேட்க முடியாது. மைதானத்தின் தன்மையை அறிந்து கடைசி வரை அனைவருமே போராடினோம். இந்த மைதானத்தில் 180 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமானதுதான். இருப்பினும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதினால் எவ்வளவு இலக்கு இருந்தாலும் இனி அது பத்தாது. எனவே சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்