147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரமாண்ட உலக சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
|இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
ராஜ்கோட்,
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது 2வது இன்னிங்சில் 51 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 65 ரன்னுடனும், குல்தீப் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் (ரன் அவுட்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியேறிய ஜெய்ஸ்வால் களமிறங்கினார். மறுபுறம் குல்தீப் யாதவ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சர்பராஸ் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்தார். மறுபுறம் ஜெய்ஸ்வால் அதிரடியை தொடங்கினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 231பந்துகளில் (14 பவுண்டரி , 10 சிக்சர் ) இரட்டை சதமடித்து அசத்தினார்.
இந்திய அணி 98 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 445 ரன்கள் எடுத்து 556 ரன்கள் முன்னிலையுடன் இருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் முதலில் நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் பின்னர் டி20 கிரிக்கெட்போல அதிரடியாக விளையாடி சதமடித்தார். அப்போது தசைப்பிடிப்பு காயத்தால் 3-வது நாள் மாலையில் பாதியிலேயே வெளியேறிய அவர் 4வது நாள், அதிலிருந்து குணமடைந்து வந்துமீண்டும் இங்கிலாந்து பவுலர்களை புரட்டி எடுத்தார்.
குறிப்பாக ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்த அவர் மொத்தம் 14 பவுண்டரி 12 சிக்ஸர்களை பறக்க விட்டு 214 ரன்கள் குவித்தார். மேலும் இந்த தொடரில் மொத்தமாக இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் அவர் 20 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 20
2. ரோகித் சர்மா : 19
3. சிம்ரோன் ஹெட்மேயர் : 15
4. பென் ஸ்டோக்ஸ் : 15