< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளைக்கு ஒத்திவைப்பு
கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளைக்கு ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
10 Sep 2023 3:36 PM GMT

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று போட்டி மழை காரணமாக நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தொடர்ந்து 2-வது முறையாக 100 ரன்களை தாண்டியது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். முதலில் ரோகித் 56 ரன்களிலும், சிறிது நேரத்திலேயே கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று போட்டி மழை காரணமாக நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள நடுவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்தபோதும் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் நாளுக்கு அதாவது நாளைக்கு போட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவுட் ஆகாமல் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ளனர். நாளை மாலை 3 மணிக்கு போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்