< Back
கிரிக்கெட்
2-வது ஒருநாள் போட்டி: பந்துவீச்சில் ஜொலித்த இந்தியா- ஜிம்பாப்வே அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: பந்துவீச்சில் ஜொலித்த இந்தியா- ஜிம்பாப்வே அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

தினத்தந்தி
|
20 Aug 2022 10:32 AM GMT

முதல் ஒருநாள் போட்டியை போலவே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினர்.

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய கைடானோ டகுட்ஸ்வானாஷே 7 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இன்னசென்ட் கையா 16 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். கேப்டன் ரெஜிஸ் சகாப்வா மற்றும் வெஸ்லி மாதேவெரே தலா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சீன் வில்லியம்ஸ் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தார்.

42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சீன் வில்லியம்ஸ் தீபக் ஹூடா பந்துவீச்சில் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் ஒருநாள் போட்டியை போலவே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினர்.

பின்கள வீரர்களில் ரியான் 39 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சர்த்துல் தாகூர் 3 விக்கெட்களையும், சிராஜ், கிருஷ்ணா, அக்சர், குல்தீப், ஹூடா தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

மேலும் செய்திகள்