< Back
கிரிக்கெட்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை
கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை

தினத்தந்தி
|
15 Oct 2022 2:12 AM GMT

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க 6 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி இருப்பதாக ஐசிசி கூறியுள்ளது.

சிட்னி,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை 7 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும்.

அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட உள்ளன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன.

நாளைய தினம் கீலாங் ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் இலங்கை- நமிபியா (இந்திய நேரப்படி காலை 9.30 மணி), நெதர்லாந்து-ஐக்கிய அரபு அமீரகம் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன. இதையொட்டி போட்டிக்கான ஏற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.), ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் முழுவீச்சில் செய்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது குறித்து ஐ.சி.சி. உலக கோப்பை போட்டிக்கான தலைமை நிர்வாகி மிட்செல் என்ரைட் நேற்று கூறுகையில் ,

'உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் ஒன்று. இந்த போட்டிக்காக இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 23-ந்தேதி மெல்போர்னில் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் முழுமையாக (90 ஆயிரத்திற்கும் மேல் இருக்கை வசதி கொண்ட ஸ்டேடியம்) விற்று தீர்ந்து விட்டது.

பின்னர் கூடுதலாக இணைக்கப்பட்ட சொகுசு டிக்கெட்டுகளும் 10 நிமிடத்திற்குள் காலியானது. இதே போல் சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் தொடக்க ஆட்டத்திற்கான (அக்.22-ந்தேதி, சிட்னி) டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது.

தொடக்க நாளில் நடக்கும் இரு ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இன்னும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இவ்விரு ஆட்டங்களுக்கும் மற்றும் சூப்பர்12 சுற்றுக்கான வார இறுதி நாட்களிலும் ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதை நினைக்கும் போதே உற்சாகம் அளிக்கிறது.

அக்டோபர் மாதத்தில் கிரிக்கெட் ஸ்டேடியங்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்புவது அற்புதமானது. இன்னும் கணிசமான டிக்கெட்டுகள் உள்ளன. டிக்கெட் கிடைக்காதவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் டிக்கெட்டுகளின் மறுவிற்பனை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அதிகாரபூர்வ இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்குவது மற்றும் விற்பது பாதுகாப்பானது' என்றார்.

மேலும் செய்திகள்