< Back
ஆன்மிகம்
பரமேஸ்வரா.. பரமேஸ்வரா.. 119 ஆண்டுகளுக்கு பிறகு நடனபாதேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
ஆன்மிகம்

பரமேஸ்வரா.. பரமேஸ்வரா.. 119 ஆண்டுகளுக்கு பிறகு நடனபாதேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

தினத்தந்தி
|
10 July 2022 10:49 AM GMT

திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடலூர்:

கடலூர் நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் 1,600 ஆண்டு பழமை வாய்ந்த நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்ம உற்சவம் விழா 13 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்

கடந்த ஜூலை 2 ந்தேதி கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது. பின்னர் தினந்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று, இரவு பல்வேறு வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இன்று முக்கிய சிகர விழாவான தேரோட்டம் 119 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் நடனபாதேஸ்வரர் மற்றும் தாயார் பரிவார மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று தேரில் கம்பீரமாக எழுந்தருளினர்.

பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்று, பரமேஸ்வரா பரமேஸ்வரா என்ற பக்தி கோஷத்துடன் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

பின்னர் முக்கிய மாட வீதியில் தேர் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

இதை தொடர்ந்து 11 ந்தேதி காலை நடராஜர் தரிசனம், மாலை தீர்த்தவாரி மற்றும் 12 ந்தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவம், இரவு ரிஷப வாகனம் வீதி உலா, 13 ந் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் கணக்கர் சரவணன், கவுன்சிலர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் இருந்தனர்.

மேலும் செய்திகள்