< Back
ஆன்மிகம்
சித்திரை திருவிழா: கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்
ஆன்மிகம்

சித்திரை திருவிழா: கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்

தினத்தந்தி
|
26 April 2024 12:05 AM GMT

அழகர் மலைக்கு திரும்பி செல்வதற்கு முன்பாக மக்களிடம் கள்ளழகர் விடைபெறும் நிகழ்வாக பூ பல்லக்கு விழா நடைபெற்றது.

மதுரை,


உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானத்திற்கு அருகே உள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு எதிரே கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளினார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசித்தனர்.


முன்னதாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து புறப்பட்டு மதுரை மாநகருக்குள் நுழையும்போது மக்கள் எதிர்சேவை செய்து கள்ளழகரை வரவேற்றனர். அதனை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தசாவதார காட்சி அளித்தபின், அழகர் மலைக்கு திரும்பி செல்வதற்கு முன்பாக மக்களிடம் கள்ளழகர் விடைபெறும் நிகழ்வாக பூ பல்லக்கு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து, இன்று அதிகாலையில் கள்ளழகரை தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்