< Back
ஆன்மிகம்
விதுரருக்கு ஓர் ஆலயம்
ஆன்மிகம்

விதுரருக்கு ஓர் ஆலயம்

தினத்தந்தி
|
28 Jun 2022 10:54 AM GMT

உத்திரபிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, விதுரர் ஆலயம். அமைதி தவழும் இடத்தில் சிறிய குன்றின் மேல் இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

பாண்டவர்கள் சார்பில், கவுரவர்களிடம் தூது சென்றார் கிருஷ்ணர். அப்போது அவர் துரியோதனின் மாளிகையில் தங்காமல், தன்னுடைய பக்தனான விதுரரின் இல்லத்தில் தங்கினார். அந்த இடம் இது என்று சொல்லப்படுகிறது. பெரிய இரும்புக் கதவுகள் கொண்ட நுழைவு வாசலுக்கு அருகே அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்யும் கண்ணன் படம் இருக்கிறது.

கோவில், மிகப்பெரிய மண்டபம் போல் அமைந்திருக்கிறது. 'மகாத்மா விதுரர்' என்ற பெயரோடு, விதுரரின் இடுப்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் திறந்துவைத்திருக்கிறார். உள் மண்டபத்தின் எல்லா திசைகளிலும் மகாபாரதக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பாஞ்சாலியின் புடவையை துச்சாதனன் இழுக்கும்போது, அதை விதுரர் கண்டிக்கும் காட்சியும் ஒன்று.

கோவிலுக்கு வெளியே ஏராளமான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்திற்கு வருபவர்கள் அதில் அமர்ந்து, பசுமையான இயற்கைச் சூழலையும் ரசிக்கலாம். அங்குள்ள மரங்களும், செடிகளும் உரிய விதத்தில் வெட்டப்பட்டு, மயில், குதிரை, மான் போன்ற வடிவங்களில் காட்சியளிக்கின்றன. கோவிலில் இருந்து ½ கிலோமீட்டர் தூரத்தில் கங்கை நதி பாய்கிறது. இது பார்ப்பதற்கு கடல் போல் காட்சி தருகிறது.

மேலும் செய்திகள்