< Back
ஆன்மிகம்
விநாயகரின் 11 வகை விரதங்கள்
ஆன்மிகம்

விநாயகரின் 11 வகை விரதங்கள்

தினத்தந்தி
|
30 Aug 2022 12:06 PM GMT

விநாயகர் அருள் பெற பதினோரு வகையான விரதங்களை, நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கிறார்கள். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை விரதம்

வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக் கிழமை தொடங்கி, ஒரு ஆண்டு முழு வதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை வழிபடும் விரதம் இதுவாகும்.

சதுர்த்தி விரதம்

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதி அன்று, விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான பலனைத் தரும். இந்த நாளில் நாம் விநாயகரை வழிபாடு செய்தால் காரியத் தடைகள் நீங்கிவிடும்.

தூர்வா கணபதி விரதம்

கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடும் விரதம் இது. அன்றயை தினம் விநாயகப்பெருமானை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி வழிபாடு செய்வதன் மூலம் வம்ச விருத்தி உண்டாகும்.

செவ்வாய்க்கிழமை விரதம்

ஆடி மாத முதல் செவ்வாய் தொடங்கி ஓராண்டு முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமையில், விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் விரதம் இது. இதனால் செவ்வாய்தோஷம் நீங்கும்.

சித்தி விநாயக விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை 14-ம் திதியான சதுர்த்தசி திதியில் விரதம் இருப்பது, இந்த விரதத்தின் சிறப்பாகும். இந்த நாளில் விநாயகரை வழிபட்டு வந்தால் எதிரிகள் விலகுவார்கள்.

குமாரசஷ்டி விரதம்

கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி, மார்கழி பிறை சஷ்டி வரை 21 தினங்கள் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில் 21 இலைகள் கொண்ட மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பிள்ளைச் செல்வம், குடும்ப வளத்திற்காக இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு 'பிள்ளையார் நோன்பு' என்றும் பெயர்.

விநாயக நவராத்திரி

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து, அதாவது விநாயகர் சதுர்த்திக்குப் பின்வரும் ஒன்பது நாட்கள் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வற்கு 'விநாயக நவராத்திரி' என்று பெயர்.

செவ்வாய்

பிள்ளையார் விரதம்

ஆடி மாத செவ்வாயன்று செய்யப் படுவது. இதனை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும். இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொதுஇடத்தில் இடித்து மாவாக்கி, தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் விநாயகர் உருவம் செய்து, புங்கமரக் கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி, அதில் விநாயகரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர். செல்வச் செழிப்புடன் வாழ இந்த பூஜை வழிசெய்வதாக நம்பிக்கை.

அங்காரக சதுர்த்தி விரதம்

பரத்வாஜ முனிவருக்கும், இந்திரலோகப் பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைத்தாள். மகரிஷி அந்தப் பிள்ளைக்கு 'அங்காரகன்' எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாக் கிழமை தொடங்கி ஒரு வருடம் இந்த விரதத்தை செய்து வந்தால், செல்வ வளம் பெற்றவனாக மாறுவான் என்பது ஐதீகம்.

வெள்ளிப்பிள்ளையார் விரதம்

ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நினைத்துக் கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்க வேண்டும். இந்த விரத பூஜையை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும். இந்த வழிபாட்டால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும்.

துர்வாஷ்டமி விரதம்

புரட்டாசி மாத வளர்பிறையில் அஷ்டமி அன்று தொடங்கி, விநாயகரை 1 ஆண்டு காலம் அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது இந்த விரதத்தின் சிறப்பு ஆகும். இந்த வழிபாட்டால் உடல் வலிமை உண்டாகும்.

மேலும் செய்திகள்