< Back
உலக செய்திகள்
எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம்; அமெரிக்கா அறிவிப்பு
உலக செய்திகள்

எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம்; அமெரிக்கா அறிவிப்பு

தினத்தந்தி
|
12 April 2023 7:55 AM GMT

ரஷியாவுக்கு எதிரான போரில் எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து, நீடித்து வருகிறது. பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. ரஷியாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு வேண்டிய நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன.

எனினும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் பலனற்று காணப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ஐரோப்பிய பகுதிகளில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ உக்ரைனின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது என பிளிங்கள் சுட்டி காட்டியுள்ளார். அதனால், போரில் எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

அடுத்து வரவுள்ள காலங்களில் உக்ரைனின் அதிரடி தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராவது பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். அவற்றில், உக்ரைனின் பாதுகாப்பு சார்ந்த உதவிக்கான, கூட்டணி நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் உறுதிமொழி உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்கப்பட்டன என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனையே உக்ரைனின் வெளியுறவு மந்திரியும் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அதில், எங்களது பேச்சில், இரும்பு கவசத்துடன் கூடிய அமெரிக்காவின் ஆதரவை பிளிங்கன் மீண்டும் உறுதிப்படுத்தினார். போரில் வெற்றி பெறுவதில் உக்ரைனின் திறமையில் சந்தேகம் கொள்ளும் எந்த முயற்சிகளையும் அவர் நிராகரித்து உள்ளார்.

உக்ரைனின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளராக அமெரிக்கா நீடிக்கிறது. வெற்றியை நோக்கிய எங்களது முன்னேற்ற பயணத்திலும், அமைதியை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்