< Back
உலக செய்திகள்
100-வது நாளை எட்டிய போர்... எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது - நெதன்யாகு உறுதி
உலக செய்திகள்

100-வது நாளை எட்டிய போர்... எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது - நெதன்யாகு உறுதி

தினத்தந்தி
|
14 Jan 2024 12:22 PM GMT

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்து வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.

மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அரசாங்கம் தனது பாதுகாப்புப்படை மற்றும் ரிசர்வ் படைகளை அதிரடியாக களத்தில் இறக்கியது. ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் இன்றோடு 100-வது நாளை எட்டியுள்ளது.

இதுவரை இந்த போரால் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்து வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் இருந்து யாராலும் தங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்தார். மேலும் எகிப்துடனான காஸா பகுதியின் பிலடெல்ஃபி எல்லையை இஸ்ரேல் ராணுவம் கையகப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் நெதன்யாகு கூறினார்.

மேலும் செய்திகள்