< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அல்பேனியாவில் புலம்பெயர்ந்தவர்களின் வாகனம் ஆற்றில் விழுந்தது.. 8 பேர் உயிரிழப்பு
|2 April 2024 7:38 AM GMT
அரபு நாடுகள் அல்லது ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் சிறிய குழுவினர் அல்பேனியா பாதையை பயன்படுத்துகின்றனர்.
திரனா:
அல்பேனியாவின் தலைநகர் திரனாவில் இருந்து தென்கிழக்கில் சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விஜோசா ஆற்றுப்பாலத்தில் இன்று அதிகாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்தது.
இதில், காரில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 7 பேர் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்றும், ஒருவர் உள்ளூர் டிரைவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து பிற நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்வோருக்கு அல்பேனியா பிரதான பாதை இல்லை. ஆனாலும், அரபு நாடுகள் அல்லது ஆசியாவைச் சேர்ந்த ஒரு சிறிய குழுவினர் கடல் வழியாக இத்தாலி செல்வதற்கும் தரை வழியாக பிற அண்டை நாடுகளுக்கு செல்வதற்கும் அல்பேனியா பாதையை பயன்படுத்துகின்றனர்.