< Back
உலக செய்திகள்
தைவான் ஜலசந்தியில் அமெரிக்க போர்க்கப்பல்கள்: சீனா கடும் எதிர்ப்பு

Image Courtacy: AFP

உலக செய்திகள்

தைவான் ஜலசந்தியில் அமெரிக்க போர்க்கப்பல்கள்: சீனா கடும் எதிர்ப்பு

தினத்தந்தி
|
29 Aug 2022 12:25 AM GMT

தைவான் ஜலசந்தி வழியாக அமெரிக்க போர்க்கப்பல்கள் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தைபே,

தைவான்-சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் தைவான் ஜலசந்தி வழியாக அமெரிக்க போர்க்கப்பல்கள் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு போருக்கு பின்னர் சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாக கருதுகிறது. ஆனால் சீனா அப்படி நினைக்கவில்லை. தைவான் இன்னமும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என சீனா கூறி வருகிறது. தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது.

இதற்கிடையில் தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் அமெரிக்கா தைவானுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. இது தைவானை சொந்தம் கொண்டாடும் சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. கடந்த மே மாதம் ஜப்பான் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் "சீனா பலவந்தமாக தைவானை கைப்பற்ற முயன்றால், அமெரிக்கப்படைகள் தைவானை ராணுவ ரீதியாகப் பாதுகாக்கும்" என எச்சரித்ததை தொடர்ந்து இந்த மோதல் தீவிரமடைந்தது.

இந்த சூழலில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த 2-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றார். இதில் ஆத்திரமடைந்த சீனா தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து ஒரு வார காலம் தீவிர போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது.

2 போர்க்கப்பல்கள்

இதனால் தைவான்-சீனா இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது. ஆனால் அதன் பின்னரும் சீனாவை மேலும் ஆத்திரப்படுத்தும் வகையில் அமெரிக்க எம்.பி.க்கள் அடுத்தடுத்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சீனாவையும், தைவானையும் பிரிக்கும், தைவான் ஜலசந்தி வழியாக அமெரிக்காவின் 2 போர்க்கப்பல்கள் சென்றதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் ஏற்பட்ட பதற்றத்துக்கு பிறகு அமெரிக்க போர்க்கப்பல் தைவான் ஜலசந்தியை கடந்து சென்றது இதுவே முதல் முறையாகும்.

சீனா கடும் கண்டனம்

இது தொடர்பாக அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச கடற்பகுதியில் சுதந்திரமான வழிசெலுத்தலை நிரூபிக்கும் விதமாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய 'யு.எஸ்.எஸ். ஆன்டிடம்' மற்றும் யு.எஸ்.எஸ். 'சான்ஸ்லர்ஸ்வில்லே' ஆகிய போர்க்கப்பல்கள் தைவான் ஜலசந்தி வழியாக சென்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது ஒரு ஆத்திரமூட்டும் செயல் என கூறி சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன ராணுவத்தின் கிழக்கு கட்டளை பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஷி யி இதுபற்றி கூறுகையில், "அமெரிக்க போர்க்கப்பல்களின் நகர்வை தீவிரமாக கண்காணித்தோம். கிழக்கு கட்டளை பிரிவின் துருப்புக்கள் அதிக விழிப்புடன் உள்ளன. எந்த நேரத்திலும் எந்த ஆத்திரமூட்டலையும் முறியடிக்க படைகள் தயாராக உள்ளன" என்றார்.

மேலும் செய்திகள்