< Back
உலக செய்திகள்
இஸ்லாமாபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு - அமெரிக்கா
உலக செய்திகள்

இஸ்லாமாபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு - அமெரிக்கா

தினத்தந்தி
|
26 Dec 2022 5:47 PM GMT

இஸ்லாமாபாத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக அமெரிக்கர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானில் சமீப வாரங்களாக தொடர்ச்சியாக பயங்கர தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாடாளுமன்றத்துக்கு அருகே நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகினர். இந்த தாக்குதல் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக அமெரிக்கர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், "விடுமுறை நாட்களில் இஸ்லாமாபாத்தில் உள்ள மேரியட் ஓட்டலில் அமெரிக்கர்களைத் தாக்க மர்ம நபர்கள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அரசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. எனவே அந்த ஓட்டலுக்கு செல்வதை அமெரிக்கர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

மேலும் விடுமுறை நாட்களில் இஸ்லாமாபாத்தில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு தனது பணியாளர்களையும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்