< Back
உலக செய்திகள்
துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் அலங்கோலமாக காட்சியளிக்கும் டுவிட்டர் அலுவலகம்
உலக செய்திகள்

துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் அலங்கோலமாக காட்சியளிக்கும் டுவிட்டர் அலுவலகம்

தினத்தந்தி
|
31 Dec 2022 5:16 PM GMT

துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் டுவிட்டர் தலைமையகம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

டுவிட்டர் நிறுவனத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க் அதன் அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன.

டுவிட்டரை வாங்கியதும் அதன் ஊழியர்களின் சரி பாதிக்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க், சான்பிரான்சிஸ்கோவில் டுவிட்டர் தலைமையகத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அதன் ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டபோது எலான் மஸ்க் அதனை மறுத்துவிட்டார். இதனால் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் டுவிட்டர் தலைமையகம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. கழிவறைகள் அழுக்குபடிந்து காணப்படுவதாகவும், மீதமான உணவுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். அதோடு கழிவறைகளில் பொருட்களை மாற்றுவதற்கு துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் ஊழியர்கள் சொந்தமாக 'டாய்லெட் பேப்பர்'களை கொண்டு வந்து பயன்படுத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்