< Back
உலக செய்திகள்
மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலக்கப்பட்டுள்ளது - இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டு
உலக செய்திகள்

'மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலக்கப்பட்டுள்ளது' - இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
20 April 2024 3:53 AM GMT

தனது மனைவி புஸ்ரா பீவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம் செய்தது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது மனைவி புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தனது மனைவிக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த உணவால் அவர் தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது உடல்நிலை நலிவடைந்து வருவதாகவும் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரானபோது இந்த குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்