< Back
உலக செய்திகள்
அமெரிக்கா: தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

image courtesy: AFP

உலக செய்திகள்

அமெரிக்கா: தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

தினத்தந்தி
|
25 May 2022 1:13 AM GMT

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

உவால்டே,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் கொடூரமாக, புரியாத வகையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என்றும், அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் என்றும் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைத் தவிர எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. 18 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இன்று மாலை வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சூரிய அஸ்தமனம் வரை வெள்ளை மாளிகை மற்றும் பிற பொது கட்டிடங்களில் அமெரிக்கக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்