< Back
உலக செய்திகள்
வெளிநாடுகளில் இருந்து 6 லட்சம் டன் தரமற்ற அரிசி இறக்குமதி - இலங்கை மந்திரி வருத்தம்

கோப்புப்படம்

உலக செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து 6 லட்சம் டன் தரமற்ற அரிசி இறக்குமதி - இலங்கை மந்திரி வருத்தம்

தினத்தந்தி
|
1 Sep 2022 10:16 PM GMT

ரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் வெளிநாடுகளில் இருந்து 6 லட்சம் டன் தரமற்ற அரிசி இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

இலங்கையில் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நோக்கில் ரசாயன உர இறக்குமதிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தடை விதித்து இருந்தார். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்பாக இலங்கை மக்களின் தேவையில் 3-ல் ஒரு பங்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வேளாண் துறை மந்திரி மகிந்த அமரவீரா நாடாளுமன்றத்தில் கூறுகையில், 'சில கட்சிகளின் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஆலோசனைப்படி, இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க நாம் விரும்பியதன் விளைவு, பிற நாடுகளில் இருந்து தரமற்ற, தீங்கு விளைவிக்கும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. சுமார் 6 லட்சம் டன் அளவுக்கு இத்தகைய அரிசியை நாம் இறக்குமதி செய்துள்ளோம்' என கவலை தெரிவித்தார்.

நெல் விளைச்சலுக்கு மோனோகுரோட்டோபாஸ் மற்றும் கிளைபோசேட் போன்ற வேதி உரங்களை பயன்படுத்தும் நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்துள்ளதாக வருந்திய அமரவீரா, இத்தகைய பொருட்களை இலங்கையில் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்