< Back
உலக செய்திகள்
அரசு ரகசியங்களை கசியவிட்டதாக வழக்கு: இம்ரான்கான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

கோப்புப்படம்

உலக செய்திகள்

அரசு ரகசியங்களை கசியவிட்டதாக வழக்கு: இம்ரான்கான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

தினத்தந்தி
|
13 Dec 2023 7:51 PM GMT

பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டிருந்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார்.

இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

ஆனால் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட 'சிபர்' வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் 'சிபர்' வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதையொட்டி இம்ரான்கான், குரேஷி ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் முன்பு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தார். எனினும் இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

மேலும் செய்திகள்