< Back
உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலால் இருளில் மூழ்கிய ஒடேசா நகரம்
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலால் இருளில் மூழ்கிய ஒடேசா நகரம்

தினத்தந்தி
|
10 Dec 2022 10:56 PM GMT

ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலால் ஒடேசா நகரத்தின் மின் கட்டமைப்புகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் இந்த கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. அதே சமயம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்த சூழலில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷியா ஆளில்லா விமானங்கள்(டிரோன்) மூலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் நிலையங்கள் மீது ரஷியா நடத்தி வரும் தொடர் டிரோன் தாக்குதல்களால், உக்ரைனில் நீண்ட நேர மின்தடைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள ஒடேசா நகரின் மீது, ரஷியா நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் ஒடேசா நகரத்தின் மின் கட்டமைப்புகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாகவும், அந்நகரம் முழுவதும் தற்போது இருளில் மூழ்கியுள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் ரஷியாவின் 2 டிரோன்களை உக்ரைன் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்