< Back
உலக செய்திகள்
இஸ்ரேல்-ஹமாஸ் போர்; தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 28 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்; தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 28 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
15 Oct 2023 10:53 PM GMT

போரில் கொல்லப்பட்ட தாய்லாந்து நாட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

டெல் அவிவ்,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். இதில் இஸ்ரேல் நிலைகுலைந்துபோனது. அதை தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் மூண்டது.

தொடர்ந்து நடந்து வரும் இந்த போரில் வெளிநாட்டினர் பலர் உயிரிழந்துள்ளனர். போர் தீவிரமடைந்து வருவதால் போர் முனையில் சிக்கியிருக்கும் வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் மீட்டு வருகின்றன. இந்திய அரசு 'ஆபரேசன் அஜய்' என்ற பெயரில் போர் முனையில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை பல்வேறு கட்டங்களாக மீட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மேலும் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் போரில் கொல்லப்பட்ட தாய்லாந்து நாட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 17 பேரை ஹமாஸ் குழுவினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்