< Back
உலக செய்திகள்
அமெரிக்க மாகாணங்களில் கடும் பனிப்புயல் - 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமெரிக்க மாகாணங்களில் கடும் பனிப்புயல் - 5 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
23 March 2023 8:29 PM GMT

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடுமையான பனிப்புயல் வீசியதால் 5 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல நகரங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகளில் காணும் இடமெங்கும் பனியால் மூடப்பட்டு இருந்தது. அங்கு சாலைகளில் நிறுத்தியிருந்த கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆம்புலன்சுகள் வந்து செல்வதற்கே மணிக்கணக்கில் பயண நேரம் ஆகியது. எனவே பலர் ஆஸ்பத்திரிக்கு கூட செல்ல முடியாமல் அவதியடைந்தனர். தற்போது அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.

இந்த பனிப்புயலில் 700-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன. இந்த மரங்கள் விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். மேலும் கடும் குளிருக்கு 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

உயிருக்கே அச்சுறுத்தல் நிலவும் இந்த பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரித்து உள்ளது.

மேலும் செய்திகள்