< Back
உலக செய்திகள்
ஊழல், பணமோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை
உலக செய்திகள்

ஊழல், பணமோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

தினத்தந்தி
|
26 Dec 2022 11:24 AM GMT

ஊழல், பணமோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு குற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.



மாலே,


மாலத்தீவில் கடந்த 2018-ம் ஆண்டு அதிபர் பதவியை இழந்தவர் அப்துல்லா யாமீன். இதன்பின்னர் 2019-ம் ஆண்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து அதே ஆண்டில் இவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.41.32 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதன்பின்பு 2020-ம் ஆண்டில் வீட்டு சிறையில் வைக்கப்பட்ட பின்னர், சில மாதங்களில் விடுவிக்கப்பட்டார்.

அவர் விடுதலையான பின்னர், தீவிர அரசியலுக்கு வந்து இந்திய செல்வாக்குக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, 2023-ம் ஆண்டுக்கான அதிபர் வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து பலன்கள் பெற்ற வகையில் ஊழல் மற்றும் பணமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் தொடர்புடையவர் என்பது நிரூபிக்கப்பட்டது.

இதனை அடுத்து, அந்நாட்டு குற்ற நீதிமன்றம் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. தவிர, ரூ.41.32 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. எனினும், எந்த தவறும் செய்யவில்லை என குற்றச்சாட்டுகளை யாமீன் மறுத்து உள்ளார்.

மேலும் செய்திகள்