< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்

63வது வயதில் அடித்த யோகம்: லாட்டரியில் ரூ. 2 ஆயிரம் கோடி; 8 ஆண்டுகளில் மரணம்... செலவழித்த தொகை... மீதி எவ்வளவு தெரியுமா?

தினத்தந்தி
|
30 Jan 2023 11:05 AM GMT

தம்பதிக்கு 2 ஆயிரத்து 94 கோடி ரூபாய் லாட்டரி பணம் கிடைத்துள்ளது.

எடின்பெர்க்,

யூரோ மில்லியன்ஸ் ஜாக்பார்ட் என்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய லாட்டரி விளையாடாகும். இந்த லாட்டரியை கடந்த 2011ம் ஆண்டு ஸ்காட்லாந்தை சேர்ந்த கொலின் வயர் வென்றார். யூரோ மில்லியன் ஜாக்பாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 257.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (161 மில்லியன் யூரோ) லாட்டரியில் வென்றார்.

அவர் வென்ற லாட்டரியின் மொத்த தொகை தற்போதைய இந்திய பணத்தில் 2 ஆயிரத்து 94 கோடியே 48 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஆகும். கொலின் ஒயரின் மனைவி கிரிஸ்டினி ஒயர். இவர்கள் இருவரும் இணைந்து அந்த லாட்டரி பணத்தை பெற்றுக்கொண்டனர். லாட்டரி வென்ற சமயத்தில் கொலின் ஒயருக்கு 63 வயதாகும்.

இதனிடையே, 2 ஆயிரம் கோடி ரூபாய் லாட்டரியில் வென்ற கொலின் ஒயர் தனது 71வது வயதில் கடந்த 2019ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் மரணமடைவதற்கு முன்பு அந்த ஆண்டே கொலின் ஒயர் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டினி ஒயர் விவாகரத்து பெற்றனர்.

இந்த விவகாரத்தின் போது தான் வென்ற லாட்டரி தொகையில் பெருமளவை தனது மனைவி கிறிஸ்டினிக்கு ஜீவாம்சமாக வழங்கினார். கொலின் 161 மில்லியன் யூரோ வென்ற நிலையில் விவாகரத்து செய்த சமயத்தில் கொலினின் சொத்து 66 மில்லியன் யூரோவாக குறைந்தது. இந்திய மதிப்பில் ரூ. 660 கோடியே 14 லட்சமாக குறைந்தது.

விவாகரத்து பெற்ற 2019-ம் ஆண்டே கொலின் உயிரிழந்த நிலையில் அந்த சமயத்தில் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவாக இருந்தது என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கொலினின் சொத்து மதிப்பு மேலும் சற்று சரிந்து அவர் உயிரிழக்கும் போது 40 மில்லியன் யூரோவாக (50 மில்லியன் டாலர்கள்) இருந்துள்ளது. இறக்கும்போது கொலினின் சொத்துமதிப்பு இந்திய மதிப்பில் 407 கோடியே 52 லட்ச ரூபாயாக இருந்துள்ளது என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

2011-ல் 2 ஆயிரத்து 94 கோடி ரூபாய் லாட்டரியில் வென்ற நிலையில் கொலின் 2019-ல் உயிரிழப்பதற்கு முன் 8 ஆண்டுகளில் பல கோடி ரூபாயை செலவு செய்துள்ளார். விவாகரத்திற்கு முன் மனைவியுடன் ஆடம்பர வாழ்க்கை, தொண்டு நிறுவனம் அமைப்பு என பல்வேறு வழிகளில் லாட்டரி பணத்தை கொலின் செலவு செய்துள்ளார்.

ஆடம்பர வீடு, கார்கள் வாங்கிய கொலின், மைக்ரோ சாப்ட், டெஸ்லா உள்பட பல்வேறு பெரு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். நகைகள், கலை ஓவியங்கள் உள்பட பலவற்றை வாங்கிக்குவித்துள்ளார்.

லாட்டரியில் புதிய வீடு வாங்கிய கொலின் - கிறிஸ்டினி தம்பதி தங்கள் பழைய வீட்டை விற்காமல் அந்த வீட்டிற்கு அருகே தங்கள் பெற்றோருடன் வசித்து வந்த அண்டை வீட்டு பெண்ணிடம் இலவசமாக கொடுத்துள்ளனர். ஸ்காட்லாந்தை சேர்ந்த கிளப் கால்பந்து அணியான பெர்டிக் திரிஷ்டியின் வாழ்நாள் ரசிகராக இருந்த கொலின் அந்த அணியின் 55 சதவிகித பங்குகளையும் வாங்கியுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து ஸ்காட்லாந்து விடுதலை பெறவேண்டும் என்ற ஆதரவு கொண்ட கொலின் அதற்காக ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்கும் கணிசமாக நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும், 2 ஆயிரம் கோடி ரூபாய் லாட்டரியில் வென்ற கொலின் தான் உயிரிழக்கும் வரை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக தற்போது வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உயிரிழப்பதற்கு முன் கொலின் சுமார் 400 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், இன்னும் சுமார் 400 கோடி ரூபாய் மீதி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்