< Back
உலக செய்திகள்
சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்:  இங்கிலாந்து பரிசீலனை
உலக செய்திகள்

சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: இங்கிலாந்து பரிசீலனை

தினத்தந்தி
|
31 Dec 2022 1:04 AM GMT

இந்தியா மற்றும் ஜப்பானை தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் ஆக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.



லண்டன்,


சீனாவில் முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டது. இதன் பின்பு உடனடியாக, கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்நாட்டு அரசின் பெருமுயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால், உலக நாடுகளில் தொற்று பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் பல அலைகளை சந்தித்த பல நாடுகளும், ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், குளிர்கால சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கடந்த 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது. தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை தளர்த்தப்பட்ட பின்னர், இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 20 நாட்களில் 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவிய, சீனாவின் அரசு ஆவணங்கள் பற்றி கசிந்த தகவல்களை குறிப்பிட்டு ரேடியோ ப்ரீ ஆசியா தெரிவித்து இருந்தது.

இது சீன மக்கள் தொகையில் 17.65 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோவேக் போதிய எதிர்ப்பாற்றல் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், முதியவர்கள் தடுப்பூசி என்றாலே வேண்டாம் என ஓடுகிறார்கள்.

ஊரடங்கும் வேண்டாம் என மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இதனால், ஜின்பிங் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க திணறி வருகிறது.

இந்த சூழலில், தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை வெளியிட போவதில்லை என்று அரசு அறிவித்தது. இதனால், சீனாவில் கொரோனா நிலைமை என்னவென வெளியுலகிற்கு தெரிய வராத சூழல் காணப்படுகிறது.

சீனாவில் அதிகரித்து வரும் தொற்றை முன்னிட்டு பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தொடங்கி விட்டது. ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாடும் இந்த பணியில் இறங்கியுள்ளது. இதேபோன்று, அமெரிக்காவும், சீனாவில் இருந்து வர கூடிய பயணிகளுக்கான புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதிப்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது.

இதுபற்றி அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறும்போது, சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை பற்றி சர்வதேச சமூகத்தில் கவலை அதிகரித்து உள்ளது. அந்நாட்டில், வைரசின் மரபணு தொடர் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட வெளிப்படையான தரவுகள் பற்றாக்குறையாக உள்ளன என்றும் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து, இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கையை பற்றி பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, சீனாவில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து, தொற்றில்லை என்ற சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும்.

இதற்காக சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கான புதிய கொள்கையை அறிவிக்க இங்கிலாந்து அரசு தயாராக உள்ளது. எனினும் அதுபற்றிய குறிப்பிட்ட காலஅளவு எதனையும் அது வெளியிடவில்லை.

ஜப்பானில் நேற்று முதல் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்ற நடைமுறை அமலானது.

ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சீன பயணிகளிடம் புதிய கொரோனா விதிகளை கடைப்பிடிப்பது என்ற அறிவிப்பை வெளியிட்டன. இந்நிலையில், அமெரிக்காவும் இதுபற்றிய பரிசீலனையில் ஈடுபட்டு உள்ளது. இதேபோன்று இங்கிலாந்து அரசும், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் ஆக்க முடிவு செய்து, அதற்கான பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்