< Back
உலக செய்திகள்
அமெரிக்க ராணுவ தளங்களின் தகவல்களை சேகரித்து சீனாவுக்கு அனுப்பிய உளவு பலூன் - அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

அமெரிக்க ராணுவ தளங்களின் தகவல்களை சேகரித்து சீனாவுக்கு அனுப்பிய உளவு பலூன் - அதிர்ச்சி தகவல்

தினத்தந்தி
|
3 April 2023 2:51 PM GMT

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா வான்பரப்பில் மர்ம பலூன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் அந்நாட்டு விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் அணு ஆயுத ஏவுதளம் உள்ளது.

இந்த அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பல அடி உயரத்தில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி வெள்ளை நிறத்திலான மிகப்பெரிய மர்ம பலூன் பறந்தது. இந்த பலூன் சீன உளவு பலூன் என்பது தெரியவந்தது.

அணு ஆயுத ஏவுதளத்தின் ரகசிய தகவல்களை சேகரிக்க சீனா இந்த ரகசிய உளவு பலூனை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வர்த்தக ரீதியிலான விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு அதிகமான உயரத்தில் அந்த உளவு பலூன் பறந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பிற்கு இந்த பலூன் அச்சுறுத்தலாக விளங்கியது.

இதனை தொடர்ந்து சீன உளவு பலூனை அமெரிக்க போர் விமானங்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தின.

சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அட்லாண்டிக் கடலில் விழுந்த அந்த உளவு பலூனை அமெரிக்க கடற்படையினர் மீட்ட நிலையில் அந்த பலூனின் இருந்த கருவிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த உளவு பலூன் அமெரிக்கா முழுவதும் பறந்து அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை சீனாவுக்கு அனுப்பிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உளவு பலூன் சுட்டுவீழ்த்தப்படுவதற்கு முன்பாகவே தகவல்களை சேகரித்த உடனுக்குடன் அதை சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்த பலூன் தங்கள் நாட்டிற்கு சொந்தமானது தான் என்பதை ஒப்புக்கொண்ட சீனா அது உளவு பலூன் இல்லை என்றும் வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட பலூன் என்றும் கூறி வருகிறது.

மேலும் செய்திகள்