< Back
உலக செய்திகள்
சீனாவில் அரசியலமைப்பை திருத்தியமைக்க முடிவு- கூடுதல் அதிகாரங்களை பெறும் அதிபர் ஜி ஜின்பிங்

Image Courtesy: AFP

உலக செய்திகள்

சீனாவில் அரசியலமைப்பை திருத்தியமைக்க முடிவு- கூடுதல் அதிகாரங்களை பெறும் அதிபர் ஜி ஜின்பிங்

தினத்தந்தி
|
11 Sep 2022 12:33 PM GMT

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அதிபருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்காக அரசியலமைப்பை திருத்தியமைக்க உள்ளது.

பெய்ஜிங்,

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்காக அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அரசியலமைப்பை திருத்தியமைக்க உள்ளது.

சீனாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காங்கிரஸ் மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதில் அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக கடந்த வாரம் கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைக் கொள்கை உருவாக்க குழு கூறுகையில், 20வது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸ் மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அந்த மாநாடு முக்கியமான தருணத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும், புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது 20 வது தேசிய மாநாட்டில் கட்சி அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வது, முழுக் கட்சியின் கண்ணியத்தை சிறப்பாக ஆய்வு செய்யவும், செயல்படுத்தவும் உதவும் என அந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசியலமைப்பு மாற்றமானது, அதிபர் பதவியைத் தவிர கட்சியின் பொதுச் செயலாளரும், இராணுவத் தலைவருமான ஜி ஜின்பிங்கிற்கு , கட்சியின் தலைவர் பதவியை வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நூற்றாண்டு பழமையான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் மாவோ மட்டுமே இதுவரை கட்சியின் தலைவர் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்