சீனாவில் கொரோனாவுக்கு 2 பேர் பலி..!!
|சீனாவில் தளர்வுகளுக்கு பின் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்,
மக்கள் போராட்டம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பின்பற்றி வந்த கடுமையான கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை சீனா சமீபத்தில் தளர்த்தியது. இதன் காரணமாக சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் இருக்கும் மயானங்களில் தினந்தோறும் வழக்கத்தை விட அதிக அளவில் பிணங்கள் குவிந்து வருவதாகவும், மயானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் கொரோனா உயிரிழப்பு குறித்து சீன அரசு கடந்த சில வாரங்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் பீஜிங்கில் கொரோனா பாதித்து சிகிச்சைப்பெற்று வந்த 2 பேர் உயிரிழந்ததாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கடந்த 4-ந் தேதிக்கு பிறகு தற்போதுதான் கொரோனா உயிரிழப்பை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் ஒரு காரணியாக இருக்கும் எந்தவொரு மரணமும் கொரோனா தொடர்பான மரணமாகக் கணக்கிடப்படுகிறது. ஆனால் சீன சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்றால் நேரடியாக இறந்தவர்களை மட்டுமே கணக்கிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.