சீனாவில் ஆயத்த ஆடை உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு
|சீனாவில் ஆயத்த ஆடை உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
பீஜிங்,
சீனாவின் ஹூனன் மாகாணம் வென்பெங்க் மாவட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி ஆலை உள்ளது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆலையில் இன்று அதிகாலை காலை திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஆடை தயாரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பருத்தியில் பற்றிய தீ மளமளவென பரவி ஆலையில் பிற பகுதிகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தால் ஆலையில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து தீயணைப்பு, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். ஆலையில் வெல்டிங் பணி நடைபெற்றபோது ஆடை தயாரிப்பிற்கு வைக்கப்பட்டிருந்த பருத்தி மீது எதிர்பாராத விதமாக தீப்பற்றியதாகவும், இதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.