சீனாவில் குளிர்காலத்தில் 3 கொரோனா அலைகள் பரவும் என கணிப்பு
|சீனாவில் குளிர்காலத்தில் 3 கொரோனா அலைகள் பரவக்கூடும் என அந்நாட்டின் பிரபல தொற்றுநோய் நிபுணர் கணித்துள்ளார்.
பெய்ஜிங்,
சீனாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு 'பூஜ்ய கொரோனா கொள்கை' என்ற நடவடிக்கையை பின்பற்றி வருகிறது. இதன்படி அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது.
அதிகப்படியாக தினசரி சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சீன அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் தற்போது ஓரளவு கொரோனா பரவல் குறைந்துள்ளது. நேற்றைய தினம் 2,097 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் குளிர்காலத்தில் 3 கொரோனா அலைகள் பரவக்கூடும் என அந்நாட்டின் பிரபல தொற்றுநோய் நிபுணர் வூசன்யூ கணித்துள்ளார். சீனாவில் வரும் ஜனவரி 21-ந்தேதி சந்திர புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக பெருந்திரளான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சீனாவில் டிசம்பர் இறுதி தொடங்கி ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வரை 3 கொரோனா அலைகள் ஏற்படக்கூடும் என வூசன்யூ கூறியுள்ளார். இருப்பினும் கொரோனா தடுப்பூசிகள் பெருமளவில் போடப்பட்டுள்ளாதால், மக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும், இதர நோய் பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.